Saturday, August 6, 2011

யோகாசனம்

யோகாசனம் ஒரு அறிமுகம்

யோகேன சித்தஸ்ய பதேன வாசாம்; மலம் சரீரஸ்ய து வைத்ய கேன
யோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம்; பதஞ்சலீம் ப்ராஞ்ஜலி ராநதோஸ்மீ

குரு வணக்கம்:

குருவழியே ஆதி ஆதி
குருமொழியே வேதம் வேதம்
குருவிழியே தீபம் தீபம்
குருபதமே காப்பு காப்பு

சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் யோகசூத்திரம் என அழைக்கபடினும் சாஸ்திரம் என்று கூறுவதே மேன்மையாகும். "அத யோகானுசானம்"- என்று முதல் சூத்திரம் துவங்கி

புருஷார்த்த சூன்யானம் குணானம் ப்ரதி-ப்ரஸவ
கைவல்யம் ஸ்வரூப-பிரதிஷ்டா வாசுதி-சுக்தே : இதி

என முடியும் 196 சூத்திரங்களில் ஓர் யோக வேதத்தை உலகுக்கு தந்துள்ளார். இந்த யோகசூத்திரத்தை பயில்வது என்பது ஆழ்ந்து தொடர்ந்து உணர்வதும் பயிற்சி செய்வதும் ஆகும். ஏனைய சாஸ்திரங்களைப் போல் கற்பதும் விவாதிப்பதுமல்ல.யோக என்ற சமஸ்க்ருத சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. யோகம் என்றால் இணைவித்தல், அதாவது, பலவற்றின் செயல்பாட்டை ஒருமிப்புவித்தல் (சிங்க்ரோனைஸ்) என்பது ஒரு பொருள். சைக்கிள் ஓட்டும் போது, நம் கையும் காலும், கண்ணும் காதும் இணைந்து செயல்படுகின்றன. அதுபோலவே, முதலில், உடலையும் உள்ளத்தையும் ஒன்றுவித்து, பிறகு, அவ்விரண்டையும் உண்மைப் பொருளோடு ஒன்றுவித்தல் (யுனிபிகேஷன்) என்பது யோகத்தின் இன்னொரு அர்த்தமாகும்.

பதஞ்சலி யோக சூத்திரம்

காலங்காலமாக நமக்குக் கிடைத்திருக்கின்ற, பல நல்வாழ்முறைகளில் ஒன்று தான் பதஞ்சலி மாமுனிவர் அருளிய யோக சூத்திரம் என்ற நூலாகும். இவர் அன்றாட வாழ்செயல்பாட்டை யோக சூத்திரத்தில் பகுத்தருளியுள்ளார். இதில் கூறப்படும் வாழ்முறைக்கு அஷ்டாங்க யோகம் (எட்டு படிகள் உடைய வாழ்முறை, என்று பெயர்)இதில் 3வது படியே ஆசனம்.

உலகில் 84 லட்சம் உயிர்வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு உயிருக்கு ஒரு ஆசனம் வீதம் 84 லட்சம் ஆசனங்கள் உள்ளன என்று யோகிகள் கூறுகின்றனர். இதில் 250 ஆசனங்கள் வரை பழக்கத்தில் உள்ளன. எனினும் இவைகளில் 18 வகை ஆசனங்கள் தான் மிக முக்கியமானவை. இவற்றைப் பயில்வதன் மூலம் ஏனைய ஆசனங்கள் தானாக வந்து விடும்.